கவிதைகள்


கடவுளிடம் பேசும் கவிதைகள்
  •  

எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன்




1
பாபாவிடம் கேட்டேன்:

உங்களுக்கும்  எனக்குமான பிணைப்பு எது?
நம் இருவருக்கும் இடையிலான உறவுதான் என்ன? 


" நான் நூல் கட்டி இழுத்த எத்தனையோ 
சிட்டுக்குருவிகளுள் நீயும் ஒருவன் என்றார் பாபா. 

அதற்கான காரணமும் 
அவசியமும் என்ன பாபா? 

பொம்மலாட்டத்திற்கான அவசியம் எதுவோ 
அதற்கான காரணம் எதுவோ 
அதுவேதான் உன் கேள்விக்கான பதிலும். 

அப்படியென்றால் 
நீங்கள் பொம்மலாட்டக்காரரா பாபா ? 

ஆமாம்...ஆமாம்...என்றார் பாபா. 

இந்த ஆட்டம் ஏன் பாபா? 
இது தேவை தானா என்றேன். " 

ஆட்டம் என்று வந்த பிறகு 
அதை இடையில் நிறுத்த முடியாது. 
ஆட முடியாவிட்டால் 
பார்த்துக் கொண்டாவது இரு." 

என் கேள்விக்கு நீங்கள் இன்னமும் 
பதில் சொல்லவில்லை பாபா.....

கேள்வி பதில் 
அவ்வளவு முக்கியமில்லை மகனே! 

பிறகு எதுதான் முக்கியம் பாபா?

" ஆட்டம் முடிகிற போது
நீயே தெரிந்து கொள்வாய். 
அது வரை பொறுமையாய் இரு. 
அது தான் மிக முக்கியம் " 
என்றார் பாபா

மௌன பிரம்மம்

பாபா……எல்லாவற்றையும்

பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள்.

பாரபட்சம் இல்லாமல்



உங்ளைப் பொறுத்தவரையில்

நன்மையும் தீமையும் ஒன்றே.

துக்கமும் சந்தோஷமும் ஒன்றே.

மழையும் வெயிலும் ஒன்றே

இரவும் பகலும் ஒன்றே.

சிருஷ்டியும் பிரளயமும் ஒன்றே.



ஒன்று விடாமல்

எல்லாவற்றையும்

பார்த்துக் கொண்டேயிருப்பீர்கள்.



 உங்களின் அற்புதங்கள்

அனேக கோடி என்றால்

அதற்கும் மேலான கோடிகளாய்

ஆயிரமாயிரம் சோதனைகள்



உங்கள் முக தரிசனத்தில்

முழு வெளிச்சம் கிடைத்தும்

பாத தரிசனத்தில் மட்டும்

ஏன் இந்த பூடகம் பாபா?



மாயைக்குள் மயங்கி விழுந்து

சூன்யத்துள் சுருண்டு சுருங்கி

வருவதும் தெரியாது

போவதும் புரியாது

வறண்டு போகிறது வாழ்க்கை.



ஆனாலும்

உங்களுக்கான சிம்மாசனத்தை

எங்கள் இதயத்தில்

பதித்திருக்கிறோம் பாபா…..



 அதில் உட்கார்ந்தபடி தான்

நீங்கள் இந்த அனைத்தையும்

பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்



இதற்கு மேலும் முடியாது பாபா…

உங்களின் பொம்மலாட்டத்தை

உங்களோடே வைத்துக் கொள்ளுங்கள்

வேதனையும் வேடிக்கையும் ஒன்றல்ல



உங்கள் கால்விரலில் கங்கை

கை விரலிலோ பிரபஞ்சம்



சூட்சுமங்களின் சூத்ரதாரியாய் இருந்தும்

மௌன வேடிக்கை பார்க்கிறீர்கள்.



பிரம்மத்திற்கு மௌனம் தவிர

வேறென்ன தெரியும் மகனே

என்ற பாபாவிடம்

எனக்கென்ன பதில் என்று கேட்டேன்.



நீயும் பிரம்மமாகி விடு.

என்றார் பாபா



எப்படி என்றேன்



க்ண்மூடி மௌனமாய் இரு

பிரம்மமாய் ஆவாய்

என்றார் பாபா.

















No comments: